• Fri. Mar 29th, 2024

நீர்நிலைகள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள், ஓடைகள், குளங்கள் உட்பட அனைத்து பகுதிகளையும் சீரமைப்பது மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றம் பொதுமக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்குவது, பேரிடர்களின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்), விஜயதரணி (விளவங்கோடு), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) மற்றும் காங்கிரஸ் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான விரிவான திட்டம் தயாரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்வழி தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அளந்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏகமனதாக தீர்மானித்திருக்கிறோம். அதேபோன்று நமது மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நீண்ட நாட்களாக தூர்வாராமல் இருக்கிறது. எனவே, அவற்றை தூர்வாருவதற்கான ஒரு சிறப்பு திட்டத்தினை ஏற்படுத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பேரிடர்கள் வருகின்ற காலக்கட்டங்களில் எந்த விதத்தில் தணிக்க முடியும் என்பதை கருத்தில்கொண்டு அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்டு அதனடிப்படையில் எதிர்காலத்தில் அதற்கான விரிவான திட்டத்தை தயாரிப்பது என்ற முடிவினையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

மேலும், கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களை மீட்டு பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில முகாம்களில் குறைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இக்குறைகளை போக்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனமழையின் காரணமாக பழுதடைந்த சாலைகளை பழுது பார்த்தல், குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்வது, தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உண்மையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மறுகால் இல்லாத குளங்களில் மறுகால் அமைக்க நடவடிக்கை எடுப்பது. உலக்கருவி உள்ளிட்ட நீர்நிலைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது. கனமழையால் சாய்ந்த மரங்களை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பழுதடைந்த சாலையினை உடனடியாக சீர் செய்வது, ஏ.வி.எம். கால்வாய் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை கணக்கெடுப்பு செய்து, ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இதுநாள்வரை பயன்படுத்தாத குடியிருப்புகளை வீடுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது. நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுவதை கண்டறிந்து அவற்றை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், வாழை மரங்கள், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவது, மழைநீர் காரணமாக நீர்நிலைப்பகுதிகளிலுள்ள வீடுகளில் தேங்கியுள்ள சகதிகளை அகற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் காரணமாக சேதமடைந்த வீடுகள், கால்நடைகள் குறித்தும், சேதமடைந்த பயிர்கள் குறித்தும், கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகள், உடைப்புகள் போன்றவற்றை பொறுத்தவரை விரிவான ஒரு அறிக்கை ஒவ்வொரு துறையும் சமர்ப்பிக்க வேண்டுமென கட்டளையிட்டு, அதனடிப்படையில் நேரடியாக களப்பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்த பின்னரே முழுமையான சேதம் குறித்து தெரிவிக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *