
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக சர்ச்சை கருத்தை வெளிப்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளையின்போது காணாமல் போனார். அவரை ஆசிரியை மற்றும் உதவியாளர் அருகில் உள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது அங்கன்வாடிக்கு அருகே உள்ள சந்து பகுதியில் தலை மற்றும் முகத்தில் கற்களால் தாக்கப்பட்ட நிலையில், சிறுமி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடியபடி கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீசார், சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த சிறுமிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசிய போது, “கடந்த வாரம் நடந்த மூன்றரை வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குழந்தையே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி காலையில் அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்” எனக் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் இந்த பேச்சு ஊடங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெகுமாக பரவியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்புகள் ஆட்சியரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (மார்ச் 1) ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.பி.மகாபாரதிக்குப் பதிலாக, ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.காந்த் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றரை வயது சிறுமி, சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என பேசிய மகாபாரதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
