கோவை மாநகரின் மையப்பகுதியாக உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பிரத்யேகப் பாதையில் சொகுசு கார் ஒன்று சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் ஸ்லீப்பர் நடைபாதையில், விதியை மீறி கார் சென்றதைக் கண்டு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த முதியவர்களும், பெண்களும் அச்சம் அடைந்தனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நிம்மதியாக நடைப்பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் பிரம்மாண்ட நடைபாதை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வாகனங்கள் செல்வதற்கு எனத் தனியாகச் சாலை இருந்தும், கேரள மாநிலப் பதிவெண் கொண்ட கார் ஒன்று, வழி மாறி பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைக்குள் சென்றது.
இதைக்கண்ட பொதுமக்கள் கார் ஓட்டுநர் கூறியும் எதையும் கேட்காமல், திமிராக வாகனத்தை நடைபாதையிலேயே செலுத்தி உள்ளார்.
இது நடைப்பயிற்சிக்கு ஈடுபட்டு இருந்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்சிகளை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
அதில் “காரை தெரியாமல் ஓட்டி வந்தார்களா ? அல்லது ‘சரக்கு’ அடித்துவிட்டு போதையில் வந்தார்களா ?” எனப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இத்தகைய நபர்களால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகச் பதிவு செய்துள்ளவர், இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட கார் ஓட்டுநர் மீது கோவை மாநகர காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுமா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.




