மக்களின் மனதில் ஒரு கலைஞனாகவும், மக்களில் ஒருவராகவும், புரட்சித் தலைவராகவும், மக்களின் தொண்டனாகவும் அனைவருக்கும் பிடித்த மனிதராகவும் திகழந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் எனும் மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன். இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் – சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார் எம்.ஜி.ஆர்.தன் தாய் தந்தையை இழந்த பின் தன் முதல் அடியாக நாடகத்தில் நடிக்க துவங்கினார்.இவருடன் இவரது சகோதரர் சக்ரபாணியும் நாடகத்தில் இணைந்து நடித்தனர்.
இதில் அனுபவம் பெற்ற எம்.ஜி.ஆர். அயராத உழைப்பால் திரைத்துறைக்கு பயணித்தார்.தன் முதல் படமான சதிலீலாவதி படத்தில் நடித்து மக்களுக்கு அறிமுகமானார். இவர் 25 ஆண்டுகள் திரையுலகில் தடம் பதித்து மக்களால் கவரப்பட்டார்.பின் தானே படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார்.அதன் பிறகு காந்தியின் கொள்கைகள் மீது ஆர்வம் ஏற்பட்டதால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பின் திராவிட முன்னேற்றத் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழந்தார்.கலைஞர் மு.கருணாநிதியுடன் நட்பு பாராட்டினார். அண்ணாதுரை மறைவுக்கு பின் பல சலசலப்புகள் ஏற்பட்டாதால் எம்.ஜி.ஆர் அக்கட்சியை விட்டு வெளியேறி 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நிறுவினார்.
பிறகு திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயர் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. 1977-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
இவரது ஆட்சியில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் 2016 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவரது அரசியல் வாரிசு ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.இவர் இறந்த பின்னும் இன்று வரை இவருக்காகவே ஓட்டு போடுவோர் இருந்துகொண்டே இருகின்றனர்.காரணம் மக்கள் அவர் மீது கொண்ட அளவில்லா அன்பு மட்டுமே…இத்தகைய பொருமைக்குரிய ஆட்சியாளராகவும், தன்னிகரற்ற மனிதனாக விளங்கிய எம்.ஜி.ஆர் பிறந்த தினம்..!