அதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு வைத்தது தொடர்பாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார்.
மேலும், அங்கிருந்த கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போதே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவின் இந்த செயலை கடுமையாக சாடினார். மேலும் இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போதே அதிமுகவினர் தெரிவத்திருந்தனர்.
இந்தநிலையில், “அதிமுக கட்சி கொடியே சசிகலா பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் கட்சி கொடியை மீண்டும் சசிகலா பயன்படுத்தி வருகின்றார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாம்பல காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரெங்கநாதனிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “சசிகலா அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா என்று கூறி, சட்டத்தையும் சசிகலா கையில் எடுக்கிறார். அதன் மூலம் அவர் பொது வெளியில் குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார். அவர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வில்லை. அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும். திமுகவும் சசிகலாவும் இணைந்து உள்ளனர். சசிகலாவிற்கு திமுக உதவுகிறது” என ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.