கனமழை காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது.
சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூர், மதுரவாயல், போரூர், கிண்டி உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (டிச.07) காலை வேளையில் பனிமூட்டம் காணப்பட்டது. மழை குறைவதற்கான அறிகுறியே பனிப்பொழிவின் தொடக்கம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், மிக்ஜாம் புயல் காரணமாக, தண்ணீரில் மிதந்து வரும் சென்னை மாநகர மக்கள், இந்த பனிப்பொழிவைக் கண்டு தற்போது மழை இருக்காது என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
அடுத்ததாக, புயல் வரக்கூடும் என சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்கள் பொய்யானவை என வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சூழலில், சென்னையில் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்டப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.