சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை இலவசமாக வழங்கும் நோக்கில், ட்ரீமர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இளைஞர்கள் தங்களது சொந்த நிதியில் ஏற்பாடு செய்த இந்த மனிதநேய மருத்துவ முகாமிற்கு ஆபிரகாம் தலைமை தாங்கினார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளைப் பெற்றனர்.
முகாமில் உடல் வலி, முதுகுவலி, காயம், சளி, தோல் நோய்கள், வயிற்றுப்புண் மற்றும் செரிமானக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

அத்துடன், மதுமேகம், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் உடல் எடை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது.

இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் சமூகப் பொறுப்புணர்வுடன் ஏற்பாடு செய்த இந்த மனிதநேய மருத்துவ முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதுபோன்ற சேவைத் திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று ட்ரீமர்ஸ் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



