மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் ஜூலை 13 ஆம் தேதி காரைக்காலில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) தேசியக் குழு உறுப்பினருமான கே. லாசர் தலைமையில் திருநள்ளாறு, நெடுங்காடு, அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிரச்சாரத்தின் போது, புதிய அரசாணையால் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் நோக்கம் சீர்குலையும் அபாயம் உள்ளதாக பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், புதிய அரசாணையை திரும்பப் பெறவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வரும் ஜூலை 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) எதிரில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு பிரச்சாரக் குழுவினர் அழைப்பு விடுத்தனர்.




