தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.262.44 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

முதற்கட்டமாக, தாம்பரம் மாநகராட்சியின் 52-வது வார்டு கன்னடபாளையத்தில் ரூ.19.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சிறுவர் பூங்காவை அமைச்சர் திறந்து வைத்தார். குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாடும் வகையில் பல்வேறு வசதிகள் இந்தப் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, 48-வது வார்டு காந்தி பூங்காவில் ரூ.64.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பிரேஷ்னல் மாதிரி புதிய கழிப்பறையையும் அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர், 23-வது வார்டு அஸ்தினாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் 38-வது வார்டு ஜமீன் ராயப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தலா ரூ.89.37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) டிஜிட்டல் ஆய்வகங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் அர்ப்பணித்தார்.
இந்த ஆய்வகங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறன் மேம்படுவதுடன், நவீன டிஜிட்டல் கல்வி அனுபவம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகத் தரத்திலான கல்வி வசதிகளை அரசு பள்ளிகளிலும் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. காமாட்சி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மின்னல் குமார், சத்தியசீலன் பொறியாளர் சந்திரன் தலைமையாசிரியர் சரஸ்வதி துணை ஆசிரியர், மாமன்ற உறுப்பினர் சசிகலா கார்த்திக், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜி.எம். சாந்தகுமார், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.





