• Tue. Apr 23rd, 2024

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசு

Byமதி

Dec 11, 2021

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதையும், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ‘பேம்-இந்தியா’ திட்டத்தை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த 2015-ஆம் ஆண்டு உருவாக்கியது. தற்போது இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பேம் – இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மின்சார வாகனங்களின் வாங்கும் விலையை குறைப்பதற்காக இது வழங்கப்பட்டது. மின்கலத்தின் திறனுக்கு ஏற்ப இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.15,000-மாக உயர்த்தப்பட்டது.

இதுகுறித்து கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர்,

1) மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களின் சார்ஜர் / சார்ஜிங் நிலையங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2) மின்கலம் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பசுமை நம்பர் பிளேட் கொடுக்கப்படும் எனவும் அவற்றுக்கு பெர்மிட் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

3) வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தனியாக சார்ஜிங் வசதிகள் அமைப்பதற்கு அனுமதித்து, சார்ஜிங் கட்டமைப்புக்கான தரநிலை, அறிவிப்பை மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டது.

4) மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விதிப்பிலுருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தி மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இது மின்சார வாகனங்களின் விலையை குறைக்க உதவும்.

5) தனியார் மற்றும் வர்த்தக கட்டிடங்களில் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் திருத்தியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, 1,61,314 வாகனங்களும், கடந்த 20220-ஆம் ஆண்டில் 1,19,648 வாகனங்களும், மொத்தத்தில் 2,80,962 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாகனங்களுக்கான இணையளத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *