நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் செல்போன் ரீசார்ஜ் செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘ரயில்வேயின் தொலைத்தொடர்பு பிரிவான ‘ரயில் டெல்’ ரயில்வே ஸ்டேஷன்களில் தொலை தொடர்பு தொடர்பான பல்வேறு சேவைகளை ஏற்கனவே வழங்கி வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் பொது சேவை மையங்கள் திறக்க முடிவு செய்துள்ளது. இந்த மையங்களை கிராமங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரை வைத்து நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் செல்போன் ரீசார்ஜ் செய்யும் வசதி, மின் கட்டணம் செலுத்துதல், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். பஸ், ரயில், விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதியும் இடம் பெற்றிருக்கும்.
முதல் கட்டமாக, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த மையம் திறக்கப்படும். அதன்பின் படிப்படியாக 200-க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.