மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் மட்டுமே இழுக்கும் தேரோட்டம் நடைபெற்றது. மூல நாத சுவாமி பிரியா விடை உடன் அகிலாண்டேஸ்வரி அம்மன் விநாயகர் முருகன் முன் செல்ல சண்டிகேஸ்வரர் பின் செல்ல திருத்தேரோட்டம் நடைபெற்றது வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் கொண்டு பூஜைகள் செய்தனர். பெண்கள் மட்டுமே தேரை இழுத்து உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து ஆடினர் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தென்கரை நான்கு ரத வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கண்ணன் என்ற பரசுராமன் சிவாச்சாரியார் பூஜைகள் செய்தார் செந்தில் குழுவினர் அலங்காரங்கள் செய்தனர். திருக்கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகை செல்வி, உபய தாரார்கள் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காடுபட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் தீயணைப்பு ஊழியர்கள் பாதுகாப்பு மேற்கொண்டனர்.

உதவி செயற்பொறியாளர் சௌந்தரராஜன் தென்கரை மின்வாரியம் பாலாஜி சோழவந்தான் மின்வாரியம் கீர்த்திகா உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் பாதுகாப்பு மேற்கொண்டனர் சுகாதார பணிகளை தென்கரை ஊராட்சி செயலாளர் முனியராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.




