திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமம், கோம்பைப்பட்டியில் ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் அருளால் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரஜக்கம்மாள் திருக்கோவில் உள்ளது.

இக்கோவில் 18-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு நதிகள் இருந்து கொண்டுவரப்பட்டு இரவு புனித நீர் கொண்டு வீரஜக்கம்மாளுக்கு செலுத்தப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இன்று புதன்கிழமை வீரஜக்கம்மாளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்களை கோவில் பூசாரிகள் பெருமாள்சாமி மற்றும் துரைச்சாமி ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களின் வேண்டுதலுக்காக கொண்டுவரப்பட்ட 15 க்கும் மேற்பட்ட கிடாய்கள் கோவில் முன்பு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பக்தர்கள் பலியிட்ட கிடாய் இறைச்சியை கொண்டு சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஏற்பாடுகளை ஸ்ரீ வீரஜக்கம்மாள் கோவில் நிர்வாகத்தர்கள் செய்திருந்தனர்.





