சேலம் ஏற்காடு சாலையில் அடிவாரம் பகுதியில் உள்ள சுங்கசாவடி டெண்டர் எடுப்பதில் 21 பேர் டெபாசிட் கட்டியிருந்தனர். இதேபோல் ஏற்காடு, குப்பனூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி டெண்டர் எடுப்பதற்காகவும் பலர் வைப்பு தொகை கட்டியிருந்தனர்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் 29ஆம் தேதி திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து யார் எடுப்பது என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெண்டர் வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று டெண்டர் விடப்படும் என்று அறிவித்த நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் டெண்டர் எடுப்பதற்காக வருகை தந்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மணிவாசகம் தலைமையில் நடைபெற்ற டெண்டரில் டெபாசிட் கட்டாத திமுக அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் குமரவேல் என்பவர் உள்ளே நுழைந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்றும் டெண்டர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் மறு தேதி குறிப்பிடாமல் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.