• Thu. Apr 25th, 2024

ஓசூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை..!

Byவிஷா

Mar 1, 2022

ஓசூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது இது தேர்தல் தோல்விக்கான எதிர்வினையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். திமுகவின் இளைஞரணி கிளை அமைப்பாளராக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒசூரின் பிரபல ரவுடியான கஜாவின் நண்பரான இவர் மீது 2020 ஆம் ஆண்டு உறவினரான நாகராஜ் என்பவரை கத்தியால் குத்தியதாக போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவை தவிர்த்து சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வெற்றி பெற செய்ததில் இரண்டு கட்சிகளும் இவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் உதயகுமாருக்கு போன் அழைப்பு வந்ததாகவும், குடிபோதையில் இருந்த இவர் பேசிக்கொண்டே அந்திவாடி அருகே நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்தவர்கள் திடீரென உதயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த மத்திகிரி போலிசார், உதயகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *