அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில் நகைகளை உருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் நகைகளை உருக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகளிடம், தமிழக அரசு அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோவில் நகைகள் உருக்கப்படும் என
உத்தரவாதம் அளித்தது. மேலும், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கும் பணிக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15க்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.