உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டத்தை வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக எடுத்து வந்தனர். காலை 5.20 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணித் திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்வில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 13-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.