மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜனநாயகன் பட விளம்பர பேனர் அரசு பேருந்து மீது விழுந்ததில் பேருந்து கண்ணாடி நொறுங்கிய நிலையில் பேனரில் இருந்த கம்பி கண்ணாடி வழியாக ஓட்டுநரின் அருகில் உள்ள சீட்டில் பாய்ந்து பயணிகள் இல்லாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் சோழவந்தான் பகுதியில் உள்ள பேனர்கள் அனைத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஜனநாயகன் பட விளம்பர பேனர் மற்றும் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சோழவந்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பொது மக்கள் சார்பில் காவல்துறைக்கு வேண்டுகோளாக வைத்துள்ளனர். மேலும் தற்போது வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அதிக காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் கீழே சாய்ந்து கிடக்கிறது. குறிப்பாக பேருந்து நிலைய மேம்பாலம் அருகில் ஜனநாயகன் பட பேனர் அதிகமான காற்று காரணமாக கீழே சாய்ந்து கிடக்கிறது. அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆகையால் உடனடியாக சோழவந்தானின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பேனர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.




