தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியும் நிலையில், மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னதாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர், தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டது.
ஆனால், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதி என்றும், இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 16 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
முன்னதாக, பிப்ரவரி 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.