அது ஒரு
தேசிய நெடுஞ்சாலை
வேகமாக பறக்கும்
வாகனங்களின் டயர்களில்
ஜிம்மியின் உடல்
கொஞ்சம் கொஞ்சமாக
பிய்து எறியப்பட்டு
கொண்டிருந்தது…
ஜிம்மியின் வாலாட்டும்
அழகை காட்டி
குழந்தைக்கு சோறுட்ட
தாய் ஒருவர் காத்திருந்தார்…
எங்க இந்த சனியன காணேம்…
ஜிம்மிக்கு உணவு வைத்த பிறகே
தூங்க போகும்
பெண் ஒருவர் காத்திருந்தார்..
ராத்திரியான தூங்கவிடமாட்டேங்குது
இன்னக்கி வரட்டும்…
கையில் கற்களோடு ஜிம்மிக்காக
காத்திருந்தான் ஒருவன்….
இனம்புரியாத சத்தத்தோடு
தெருக்களை சுற்றிச்சுற்றி
ஜிம்மிக்காக காத்திருந்தது
பெண்நாய் ஒன்று…
உயிர் பிரிகிற
அந்த கணத்தில்
இவர்களில் யாரை
நினைத்திருக்கும்
ஜிம்மி….
அ.தமிழ்ச்செல்வன்