திருப்பூர் பின்னலாடை தொழில் சரிவடைந்ததற்கு மத்தியில் ஆளும் பிஜேபி அரசு தான் காரணம் என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு வடக்கு மாவட்டம்,நம்பியூர் ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நம்பியூர் ஒன்றிய திமுக அவைத்தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு வந்த அனைவரையும் ஒன்றிய கழக செயலாளரும் நம்பியூர் பேருராட்சி தலைவருமான மெடிக்கல் பா.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் நியமிப்பதற்கு ஆலோசனை வழங்கியும், தற்போது திருப்பூர் பின்னல் ஆடை தொழில் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில் ஆளூம் பிஜேபி அரசு எடுத்த கொள்கை முடிவு தான் காரணம். அதில் நூல் விலை ஏற்றம் மூலப்பொருட்களின் விலை உயர்வு அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்னலாடை தொழில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது எனவும்,இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதற்கு நன்றி தெரிவித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம்பியூர் ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஜீவா ஒ.சுப்பிரமணியம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சென்னிமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா முரளி, சரஸ்வதி பழனிச்சாமி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளைகழக நிர்வாகிகள், துணை அமைப்புகள், உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள், இளைஞர், மகளிரணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நம்பி ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.