ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை நடைபெறும் இந்த போராட்டம், 300 நாட்களை கடந்து ஓராண்டை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், வருகிற 27ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
இந்த கோரிக்கையை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, பல்வேறு கட்சிகளின் அழைப்பை ஏற்று வரும் 27ஆம் தேதி பாரத் பந்த் நடைபெற உள்ளது. இதற்கு மாநிலங்கள் தோறும் ஆதரவு திரட்டி வருகின்றனர். கேரளாவிலும் வருகிற 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம், ஒன்றிய அரசின் போக்கை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என்றும், போக்குவரத்து ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
அன்றைய தினம் ஆங்காங்கே ,ரயில், பஸ் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டு கட்சி, முழு அடைப்பு நடைபெறும் என்று ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்றைய தினம் கேரளாவில் முழுமையான பாரத் பந்த் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.