விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தவும் பசுமையை பேணிப் பாதுகாக்கவும் மரங்கள் அதிகம் நடுவதற்கு வலியுறுத்தியும் இளைஞர்கள் உடலை பேணி பாதுகாக்க வலியுறுத்தியும் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டியில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்கள் சுமார் 640 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியானது வெம்பக்கோட்டையில் துவங்கி ஆலங்குளம் வரை சுமார் 15 கிலோமீட்டர் நடைபெற்றது.
மாரத்தான் போட்டியை வட்டாட்சியர் தன்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெம்பக்கோட்டை சிபியோன் உண்டு உறைவிடப் பள்ளி தாளாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார்.
மாரத்தானில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆலங்குளம் பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ் பரிசுகளை வழங்கினார்.
கிராமத்தில் நடக்கும் மாரத்தான் போட்டியில் இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடியது மிகவும் வரவேற்கக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
செய்தியாளர் -சிந்து