புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் என்றால் நம் நினைவில் வருவது ஏ.ஆர்.ரகுமான் . மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர். இவர் தன் இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் ஒரு இசை குடும்பம். இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர் இவர். ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார்.
இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் தான். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.இவரின் கலைப் பயணம் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டே தான் உள்ளது.இந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று..!