தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 29 ஆவது வார்டு பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள காலி இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 ஆவது வார்டு பகுதியில் ஏற்கனவே நகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வரும் நிலையில் அதன் அருகில் உள்ள காலி இடத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு கூடம் அல்லது சமுதாயக்கூடம் நூலகம், என அப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் காலி இடத்தில் புதிய மயானம் அமைக்கும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டதால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காலி இடத்தில் மயானம் அமைக்கும் பணியை கைவிட்டு புதிய விளையாட்டு மைதானம் அல்லது பொதுமக்களுக்கு பயன் பெரும் வகையில் சமுதாயம் கூடம் உள்ளிட்டவை கட்டி தர வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியரிடம் பத்து வருடங்களுக்கு மேல் கோரிக்கை மனு அளித்தனர்.



