மும்பையைச் சேர்ந்தவரும், என்சிபி (தேசியவாத காங்கிரஸ்)
அஜித் பிரிவின் முன்னாள் தலைவருமான ராஜேந்திர ஹகாவானே மருமகள் வரதட்சணை கொடுமை காரணமாக புனேவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு உதவியதாக கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
என்சிபி தலைவராக இருந்த ராஜேந்திர ஹகாவானேவும் அவரது மகன் சுஷீலும் தலைமறைவாக இருந்தபோது, கொங்கோலி டோல் பிளாசா அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான வீர்குமார் பாட்டீலின் மகன் ப்ரிதம் பாட்டீலை போலீசார் கைது செய்தனர். பின்னர் ராஜேந்திர ஹகாவானேவும் சுஷீலும் கைது செய்யப்பட்டனர்.

ராஜேந்திர ஹகாவானேயின் மருமகள் வைஷ்ணவி (26) கடந்த 16ஆம் தேதி புனேவின் பாவ்தன் பகுதியில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டார். 111 பவுன் தங்கமும், வெள்ளியும், ஒரு சொகுசு காரும் வரதட்சணையாகக் கொடுத்தும், நிலம் வாங்குவதற்காக மேலும் 2 கோடி ரூபாய் கேட்டு கணவரின் குடும்பத்தினர் வைஷ்ணவியை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வைஷ்ணவியின் கணவர் சஷாங், மாமியார் லதா ஹகாவானே, நாத்தனார் கரிஷ்மா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
வைஷ்ணவியின் உடலில் இறப்பின்போது 30 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையை அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. வைஷ்ணவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. அந்த அறிக்கையின்படி, 15 காயங்கள் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்டவை. 11 காயங்கள் 5 முதல் 7 நாட்களுக்குள் ஏற்பட்டவை. இதனால், இறப்பதற்கு முன்பு அந்தப் பெண் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.