சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விடக் கோரி, பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 2-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கின்போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டுச் சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் ஆகிய பொருட்களும் அடங்கும்.
இதில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களும் சேதம் அடையும் வகையானவை என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த பொருட்கள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில், இப்போது அவர் 2-வது முறையாக அதே கோரிக்கையை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.