சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று கேரள நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் மோகன்லால் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என்றும், அது இறந்த வளர்ப்பு யானையின் தந்தங்கள் என்றும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ஒரு சாமானியனுக்கு அரசு இப்படி தளர்வு அளிக்குமா..? என கேள்வி எழுப்பியதுடன், சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்றும், மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்றும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.