இந்தியாவில், 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசினார். அப்போது அவர், “கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதில், 2017-ம் ஆண்டில் 5,955 விவசாயிகளும், 2018-ம் ஆண்டில் 5,763 பேரும், 2019-ம் ஆண்டில் 5,957 பேரும், 2020-ம் ஆண்டில் 5,579 பேரும், 2021-ம் ஆண்டில் 5,318 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதுடன், இந்த பட்டியலில் முதல் மற்றும் 2-வது இடத்தில் அவை உள்ளன. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள், பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.