பொதுத் தேர்வு எழுதக்கூடிய பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவை அதற்கு முன்கூட்டியே நடத்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. திட்டமிட்டபடி பொது தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதிபட கூறினார். மேலும், 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்தது நினைவுக்கூரத்தக்கது.