திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் வழங்கப்பட்ட தரமற்ற ரேசன் அரிசியை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இவ்விரு கிராமங்களுக்கும் சேர்த்து மாவடப்பு கிராமத்தில் வைத்து ரேசன் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்குவது வழக்கம். இதற்கு முன்னர் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று காடம்பாறையில் ரேசன் பொருட்களை வாங்கி வந்தனர் இம்மக்கள்.
அரசின் ரேசன் பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கே வந்து வழங்கப்பட்டு வந்த நிலையில் 3 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி மிகவும் தரமற்றதாகவும், அரிசியை சமைத்து சாப்பிட முடியவில்லை என்று மலைவாழ் பழங்குடி மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரேசன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் உங்களுக்கு நல்ல அரிசி வழங்குகிறோம் என்று கூறியே ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டிய 35 கிலோ அரிசியை மாதத்தின் இறுதி நாட்களில் வழங்கியிருக்கிறார்கள்.
இன்று காலை இக்கிராம மக்களுக்கு வழங்கப்பட இருந்த அரிசி முற்றிலும் தரமற்றதாக இருந்திருக்கிறது. இதனை வாங்க மறுத்த பழங்குடிகள் ரேசன் அரிசி வழங்கும் அரசு ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
காட்டில் நடக்கும் அநீதிகளை வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காக தாங்களே இச்சம்பவத்தை வீடியோக்களாக பதிவு செய்து அதை முறையாக அரசுக்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும் ஒரு செய்தியாளர்களை போல வீடியோக்களை தயாரித்து உள்ளார்கள் இந்த உள்ளூர் பழங்குடி இளைஞர்கள்.
பழங்குடிகளின் இந்த அநீதிக்கு எதிரான குரலும், அதனை ஆவணமாகும் இத்தகை செயல்பாடுகளும், நிச்சயம் நீதி தேடித்தரும். பழங்குடிகளின் குரல் நீதிக்கான குரலாக இருக்கட்டும்.