பவானியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை அலைக்கழிக்கும் வைரமங்கலம் ஊராட்சி அலுவலர்கள்.
கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
ஈரோடுமாவட்டம் பவானி ஊராட்சியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி 500க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் உங்களது கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து தங்களது கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் கொடுத்தனர்.
அதில் வேலை தொடங்கும் நேரத்தை 9 மணி என திருத்தி அமைக்க வேண்டும்,தினசரி தொழிலாளர்களை போட்டோ எடுக்கும் முறையை கைவிட வேண்டும், ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், வேலை கொடுக்க முடியாத நாட்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும், தினக்கூலி 281 முழு தொகையும் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மேலும் இது பற்றி தொழிலாளர்கள் கூறுகையில் நாங்கள் வைரமங்கலம் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களாக உள்ளோம் எங்களுக்கு சரியான வேலை கொடுப்பதில்லை, முழு ஊதியமும் கொடுப்பதில்லை, ஏன் என கேள்வி எழுப்பினால் பஞ்சாயத்து தலைவரும், பணியின் பொறுப்பாளர் மோகனா என்பவரும் மிகவும் ஏளனமாகவும் அலட்சியமாகவும் பதில் அளித்து திருப்பி அனுப்புகிறார்கள். இதனை நம்பி இருக்கும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் ஒருவேளை உணவுக்குக் கூட வழி இன்றி மிகவும் போராட்டமான வாழ்வாதாரத்தை எதிர்கொண்டு வருகிறோம் .ஆகவே பவானி ஊராட்சி அலுவலக அலுவலரிடமும் ,தமிழக அரசிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். தமிழக அரசு எங்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்க்கைக்கு வழி வகை செய்ய வேண்டும். மேலும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.