ஆண்டிபட்டி அருகே கல்குவாரி எந்திரத்தில் சேலை சிக்கியதால் 60 வயது பெண் கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே உள்ள கருப்பன்பட்டியில் ராஜா என்பவருக்கு சொந்தமான கல் குவாரி மற்றும் கிரசர் இயங்கி வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக செயல்பட்டு வரும் இங்கு பிராதுகாரன்பட்டியை சேர்ந்த 60 வயது பெண் கூலித்தொழிலாளி பிச்சையம்மாள் வழக்கம்போல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கல் உடைக்கும் இயந்திரத்தில் கற்களை கொட்டும்போது, அவரது சேலை இயந்திரத்தின் பெல்டில் சிக்கியது. இதில் பெல்டில் இழுத்துச் செல்லப்பட்டு இயந்திரத்தில் கால்கள் சிக்கி படுகாயமடைந்து ,ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை அங்கு வேலை பார்த்தவர்கள் இயந்திரத்தை நிறுத்தி மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேலை பார்க்கும் போது இயந்திரத்தில் சிக்கி பெண் கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.