பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸை சேர்ந்த அமரீந்தர் சிங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பித்தார் அமரீந்தர் சிங்.
அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக, அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நானும், எனது தந்தையும் ராஜ்பவன் செல்கிறோம். அப்பா பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இனி எங்கள் குடும்பத்தின் தலைவராக எங்களை வழிநடத்துவார்” என்று பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மக்கள் செல்வாக்கைப் பெற்ற அமரீந்தர் சிங் ராஜினாமா செய்திருப்பது, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.