டி20 உலக கோப்பையில் இந்திய அணி நாளை வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. எனினும் அடிலெய்ட்டில் நாளை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் போட்டி நடைபெறுவது சந்தேகமாக இருக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. தென்னாப்பிரிக்காக்கு எதிரான போட்டிகள் கூட கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்றோம். விராட்கோலி நல்ல மனநிலையில் இருக்கிறார். ஹோட்டலில் அவரது தனிநபர் சுதந்திரம் பறிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் சிறப்பாக கை ஆண்டார்.
விராட் கோலி எப்போதும் போல் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி ஆடிய விதம் பிரமிக்கும் வகையில் இருந்தது. அதுவும் அந்த 19 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்தது சிறப்பான ஆட்டமாகும். கேஎல் ராகுல் குறித்து பேசிய ராகுல் டிராவிட், கேஎல் ராகுல் ஒரு நல்ல தொடக்க ஆட்டக்காரர். அவர் சிறப்பாக தான் விளையாடி வருகிறார்.
சில போட்டிகளில் தடுமாறலாம். ஆனால் அவருடைய தரம் என்னவென்று எங்களுக்கு தெரியும். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பயிற்சியாளரான எனக்கும் கேப்டனான ரோகித் சர்மாவுக்கும் தொடக்க ஆட்டக்காரராக யார் நாளைய போட்டியில் இறங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கே எல் ராகுல் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எனக்கு நன்றாக தெரியும்.
ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரராக செயல்படுவது மிகவும் சிரமம். அவர் நிச்சயம் ரன் குவிக்கும் பாதைக்கு திரும்புவார் என நம்புகிறேன். தினேஷ் கார்த்திக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் கடினமான சூழலில் பேட்டிங் செய்து வருகிறார். அதனால் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது அவசியம்.
தினேஷ் கார்த்திக் இன்று பயிற்சிக்கு வந்தார். பயிற்சி செய்யும் போது அவருக்கு எவ்வித உடல் அளவில் சிரமும் தெரியவில்லை. எனினும் இறுதி முடிவு நாளை காலை தான் எடுப்போம். ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் தெளிவாக இருக்கிறார். அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கை கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார் என்று டிராவிட் கூறினார்.