கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்குமலை பீட் பகுதியில் நாட்டு வெடி வைத்து மிளா மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தோவாளை அருகேயுள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் நாட்டு வெடி வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய கும்பல்இருப்பதாக தகவல் கிடைத்தது .
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மூன்று நபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தோப்பூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம், ஏசுவடியான் ,காட்டு புதூரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பது தெரியவந்தது. பிடிபட்ட 3 பேரிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய நாய் ,அரிவாள், காட்டுப் பன்றி இறைச்சி ஆகியன கைப்பற்றப்பட்டது. மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.