சிலமாதங்களுக்கு முன்பாகவே வேளாண் சட்டத்திருத்தத்தை திரும்ப பெற்றிருந்தால் பல விவசாயிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக நீண்ட போராட்டத்திற்கு இடையே நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்த நிலையில் அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அவர்கள் தான் மிகவும் முக்கிய காரணம் என சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகர்கோவிலில் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, விஜய் வசந்த் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு சில காலங்களுக்கு முன்னதாகவே வேளாண் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற்றிருந்தால் பல விவசாயிகளின் உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் எனவும் பிரதமர் உறுதி அளித்தது போன்று உடனடியாக அதிகாரபூர்வமாக சட்ட திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.