தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 10-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.