தமிழகத்தில் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று இபிஎஸ் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள். அப்போது, “குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை அறுத்தெறிவோம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.