கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தாலிபான்கள் காபுலை கைப்பற்றி ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இந்த சமயத்தில் தாலிபான்களுக்கு பயந்து காபுல் விமான நிலையத்தின் ஓடுபாதையிலும், வெளியேவும் ஆயிரக்கணக்கில் ஆப்கன் மக்கள் குவிந்தனர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சூழலில் காபுல் விமான நிலையம் அருகே இரண்டு இடங்களில் அமெரிக்கர்களை குறிவைத்து மனிதவெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ் கோர்சான் தீவிரவாத அமைப்பினர் நடத்தினர். இதில் 12 அமெரிக்கர்கள் உட்பட 72 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு காரணமான ஐஎஸ் கோர்சான் அமைப்பினர் மீண்டும் ஒரு முறை காபுல் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களின் இருப்பிடத்தை குறிவைத்து ட்டோன் தாக்குதலை அமெரிக்க படையினர் நிகழ்த்தினர்.
இத்தாக்குதலில் ஐஎஸ் அமைப்பினர் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களுக்கு பதிலாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 10 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் காபுல் ட்டோன் தாக்குதல் எங்களின் தவறுதான் என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் பிரிவின் ஜெனரல் கென்னத் மெக்கன்சி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ட்ரோன் தாக்குதல் ஒரு சோகமான தவறு என குறிப்பிட்டார். எங்கள் புலனாய்வு அமைப்பின் பெரிய தவறு இது என கூறினார்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியிருக்கும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஏந்த வகையில் இழப்பீடு தருவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.