• Sat. Apr 20th, 2024

சேலத்தில் விறுவிறுப்பாக துவங்கிய வாக்குப்பதிவு!..

சேலம் மாவட்டத்தில் 24 பதவிகளுக்கான வாக்குப்பதிவு 195 வாக்கு சாவடிகளில் தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், பிற மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை காலியாக இருந்த 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 11 பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பித்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமிருந்த 24 பதவிகளுக்கு 195 வாக்குச்சாவடிகளில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 58 வாக்குச்சாவடிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட ஊராட்சி குழு 10-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ்.ஆர்.சண்முகம் வேலா கவுண்டனூர் அரசு துவக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *