விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அழைப்பு
ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை விருதுநகர் மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை – 14 எனும் முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்புகொள்ளலாம் (தொடர்பு எண்கள்;.9944793680, 9659532005) என மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.