விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 17)இவர் அந்தப் பகுதியில் கூலித்தொழில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று பட்டப் பகலில் அதே பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியில் சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அப்போது அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த அவரது உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் இந்த நிலையில் திடீரென இளைஞர்கள் சிலர் அந்த வழியில் வந்த தாயில்பட்டி வழியாக சாத்தூர் செல்லும் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தனர்.
உடனடியாக அங்கு போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பட்டப் பகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் முன்பகை காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு எது காரணமா? என்கிற கோணத்தில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




