• Sun. May 5th, 2024

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம்..!

Byவிஷா

Dec 11, 2023

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகிறது.
பொதுவாக திங்கட்கிழமைகளை சோமவார் என்று கூறி சிவனை வழிபடுகிறோம். அதிலும் கார்த்திகை மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு சகல புண்ணியங்களை சேர்க்கும். சோமவார தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகம் கோடி புண்ணியங்களை அள்ளித்தரும். இந்த சங்காபிஷேகத்தை நேரில் காண்பவர்களுக்கும் வாழ்க்கை உயரும். இந்த நாளில் சந்திரனை வழிபடவும் உகந்தது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சோம வாரத்தில் சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். 108, 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, தர்ப்பை கொண்டு அர்ச்சித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதனை காண பிறவிப்பயனை அடையலாம். சங்கு என்பது மகாலட்சுமி அம்சம். இதனை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்விப்பர். சிவபெருமானும் தங்கையான சங்கால் அபிஷேகம் செய்யும் போது மனம் குளிர்ந்து விடுவார். இந்த நேரத்தில் நம்முடைய வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் பலிக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது..
சிவன் எப்படி சோமன் ஆனார் தெரியுமா? சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது. சந்திரனை முடிசூடிக் கொண்டவர் சிவன். அப்படி சந்திரனை முடிசூடிக் கொண்ட சிவன், சேலத்தில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர். இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது. இந்த ஆசிரமத்தில் உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசிகளை அமைத்து அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும். இதயம் சம்பந்தபட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள் அதனால் அன்று சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் வழக்குகளில் வெற்றி, வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள்.
சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீரும், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும், 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். கோடி தானம் செய்த பலன் கிடைக்கும். காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும். வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும். வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும். வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும் பாக்கியம் கிடைக்கும். மேலும் சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்திட வீடு, மனை, குழந்தைப்பேறு, செல்வம் என சகல செல்வங்களும் வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *