தன் ஏழாவது வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை பெற்றவர் வைத்தியநாதன். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வையச்சேரி கிராமத்தில், 1844 மே 26ல் பிறந்தார். தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்சௌகம் சீனுவையங்கார் போன்றோரைத் தொடர்ந்து கருநாடக இசையில் புகழுடன் விளங்கியவர். ‘
சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம்’ முதலிய நுால்களை ஆராய்ந்து தெளிந்தார். கர்நாடக இசைக் கலைஞர் தியாகராஜரின் நேரடி சீடரான மானம்புச்சாவடி வெங்கட சுப்பையரிடம், கர்நாடக இசை முறைப்படி கற்றார்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், எட்டையபுரம், கல்லிடைக்குறிச்சி, தஞ்சை, மைசூர், திருவாங்கூர் தர்பார்களில் தன் இசையை நிலை நாட்டியவர். தஞ்சாவூர் அரண்மனையில், சங்கீத வித்வான்களால் இயற்றப்பட்டு பாடப்படாமல் இருந்த, 72 மேளகர்த்தா ராகங்களுக்கு, மன்னர் சிவாஜியின் மாப்பிள்ளை சகாராம் சாஹேப்பின் விருப்பப்படி, வர்ண மெட்டுகளை அமைத்து, சபையில் அரங்கேற்றினார்.
சங்கீதத்துடன் சிவகதைகளைச் செய்பவராக வைத்தியநாதய்யர் விளங்கினார். ஒவ்வொரு இடத்திலும் சங்கீதம் ஒரு நாள், சிவகதை ஒருநாள் என்று ஹரிகதை இலக்கணம் போன்று சிவகதை சொல்பவராகத் திகழ்ந்தார். மகா வைத்தியநாத அய்யர் காலமான தினம் இன்று..!