தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி. அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாளுக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் வேங்கடராமன் . இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது.
உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற புத்தகம் முதன்மையானதாகும்.பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் தாயார் சமாதி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதுவே ரமண ஆசிரமமாகும். அதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.பல நெறிகளை போதித்த இரமண மகரிஷி பிறந்த தினம் இன்று..!