கடந்த சில நாட்களுக்கு முன் ‘வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் விழுப்புண்களே!’ என்ற தலைப்பில் முகநூலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது மனதைக் காயப்படுத்திய சில நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த அவரது தொண்டர்கள், அவருக்கு மிகவும் ஆறுதல் கூறியதாகவும், அதனால் தனது மனம் தற்போது இலகுவாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது மனதில் ஏற்பட்ட வலியை லட்சக்கணக்கான பாட்டாளிகளும் உணர்ந்திருந்தனர் என்பதை அடுத்த சில மணி நேரங்களில் நான் உணர்ந்து கொண்டேன். முகநூலில் பதிவிட்ட சில மணி நேரங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட விடாமல் அழைப்புகள் வந்தது. அழைத்தவர்கள் அனைவரும் பாட்டாளிகள்.
‘அய்யா…. நீங்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. நீங்கள் பார்க்காத துரோகமா? எந்த துரோகத்தாலும் உங்களை வீழ்த்த முடியாது’ என்பதில் தொடங்கி ஒவ்வொரு பாட்டாளியும் ஒவ்வொரு விதமாக என்னை தேற்ற முயன்றனர். அய்யா கவலைப்படக்கூடாது என்ற எண்ணமும், உணர்வும் ஒவ்வொருவரிடமும் இருந்ததை அவர்களிடம் பேசிய போது என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரிடமும் பேசி முடித்தவுடன் மனம் இலகுவாகி விடும். இப்போது எனது மனம் பஞ்சு போன்று எந்த சுமையும் இல்லாமல் இருக்கிறது. இதற்குக் காரணம் பாட்டாளிகள் தான்.
பாட்டாளிகளின் இந்த அன்பு, பாசம், பற்று, மதிப்பு, மரியாதை ஆகியவற்றுக்கு முன் எந்த துரோகமும் என்னை என்ன செய்து விட முடியும். எந்த துரோகமாக இருந்தாலும் அவை பாட்டாளிகளின் அன்புக்கு முன் தூசு தான். பாட்டாளிகளுடன் பேசியதிலேயே எனக்கு இவ்வளவு உற்சாகம் பிறக்கிறதே…. அவர்களை சந்தித்தால் இன்னும் எவ்வளவு உற்சாகம் பிறக்கும்?
வெகு விரைவில் பாட்டாளிகளை சந்திப்பேன். அதனால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் அவர்களையும் அழைத்துக் கொண்டு நமது இலக்கை நோக்கி வீர நடை போடுவேன், என குறிப்பிடடார்.