• Thu. Apr 25th, 2024

கேட் வழியாக எட்டிப்பார்த்த நாயை அலேக்காகத் தூக்கிய சிறுத்தைப்புலி..!

Byவிஷா

Dec 27, 2021

கேட்டின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாய், சிறுத்தை உள்ளே வருகிறது என்று உணர்ந்தது மட்டும் தான் மிச்சம். வந்த வேகத்தில் நாயை அடித்து தூக்கிச் சென்ற சிறுத்தைப் புலியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நாம் அனைவரும் காட்டுக்குள் நடக்கும் வேட்டையைத்தான் அனிமல் ப்ளானட், நேஷனல் ஜியோக்ரஃபி சேனல்களில் பார்த்திருப்போம். ஆனால் வீட்டுக்குள்ளே வந்து வனவிலங்குகள் வேட்டையாடும் நிகழ்வை? மிக அரிதாகவே தான் காண முடியும். அதுவும் அந்த வீட்டில் சிசிடிவி இருந்தால் மட்டுமே சாத்தியம்.


பொதுவாகவே நான்கு பெரிய பூனை இனங்கள் அனைத்திற்கும் நாய் என்றால் மகிழ்ச்சியான வேட்டை தான். இதன் காரணமாக தான் அடிக்கடி வனங்களில் இருந்து வெளியேறும் சிறுத்தைப் புலிகள் கிராமங்களில் இருக்கும் நாய்களை முதலில் தாக்குகின்றன.


சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், நாய் ஒன்று தன்னுடைய வீட்டு கேட் அருகே கீழே எதையோ வெகுநேரம் கவனித்துவிட்டு ஒரே ஓட்டமாய் துள்ளியோட, கேட்டின் வலது பக்கம் மிகவும் வலுவான சிறுத்தைப் புலி ஒன்று எகிறி குதித்து வீட்டின் உட்புறத்தில் நுழைந்துவிட்டது.

என்ன நடக்கும் என்று திக் திக் என்று வீடியோவை பார்க்க, நாயை அடித்து அதே கேட்டின் வழியே எகிறி குதித்து வெளியே செல்கிறது அந்த சிறுத்தைப் புலி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு எங்கே நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். தன்னுடைய பதிவின் கீழ் நாய் – சிறுத்தைப் புலி பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களை பர்வீன் கஸ்வான் பதிவிட்டுள்ளார்.


பொதுவாக காடுகளை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் சிறுத்தைப் புலி போன்ற விலங்குகளிடம் இருந்து நாய்களை காப்பாற்றும் பொருட்டு, நாய்களின் கழுத்தை சுற்றி இரும்பு வளையத்தை மாட்டி விடுவார்களாம். இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *