• Mon. May 13th, 2024

பூஞ்ச் மாவட்டத்தில் தொடரும் பதற்றம்

Byவிஷா

Dec 25, 2023

டிசம்பர் 21 அன்று ஜம்முகாஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் டிசம்பர் 21 அதாவது கடந்த வியாழக்கிழமை மாலை 3.45 மணியளவில் ரஜோரியின் பூஞ்ச் பகுதியில் தேரா கி காலி வழியாகச் சென்ற இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நடந்த தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் முதல், ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாதிகளை தேடும் ராணுவம் மற்றும் காவல்துறையினரின் தேடுதல் பணி இன்று 5-வது நாளாக தொடர்கிறது. கடந்த வியாழக்கிழமை மாலை முதல் ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் பாஃப்லியாஸ் பகுதியிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று உயிரிழந்த நான்கு வீரர்களுக்கு ரஜோரியில் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தின் பாஃப்லியாஸ் என்ற இடத்தில் கடந்த சனிகிழமை 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 3 பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ராணுவத்தினர் மீது குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வியாழக்கிழமை 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *