அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவ்வகையில், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்- க்கும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கும், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது!
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது நா.மம்மதுக்கும், கி.ஆ.பெ. விருது முனைவர் ம. இராசேந்திரனுக்கும், கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கும், ஜி.யு.போப் விருது ஏ.எஸ் பன்னீர்செல்வத்திற்கும், மறைமலையடிகள் விருது சுகி.சிவத்திற்கும், இளங்கோவடிகள் விருது நெல்லைக் கண்ணனுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது அலாய்சியஸுக்கும் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/ லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.